2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடுதிப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், விடுதி வசதி ஏற்படுத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்களுக்குத் தலைமைதாங்கிய மாணவ தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வகுப்புத்தடையை உடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (14) பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்து. 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக நிர்வாகப் பகுதியிலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள், பிரதான வீதியோரம் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி, தமது கோஷங்களை எழுப்பினர்.  

“மாணவர்களோ வீதியில் வீ.சியோ (உபவேந்தர்) மாடி வீட்டில்; வீசி மறைந்திருந்தது போதும்; மாணவர்களை நீதிமன்றத்துக்கு அழைப்பதை நிறுத்து; விடுதி வசதிகளை வழங்கு; நியாயமாக முறையில் போராடும் மாணவர்களுக்கு வழக்குக்கு அழைப்பது மோசமான செயல்; நிருவாகமே போலி நாடகத்தை நிறுத்து; வகுப்புத் தடைகளை நிறுத்து; போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இங்கு மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் வருட மாணவர்கள் அனைவரும் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, மாணவர்கள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகக் கட்டடத்தில் குடியேறியுள்ளனர். 

“நாங்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்ற போதிலும், பல்கலைக்கழக நிர்வாகத்தால் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எமது சக மாணவர்கள் 17 பேருக்கு எதிராக, நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விடுதிகளிலிருந்து வெளியேறாத மாணவர்கள், பரீட்சைகளில் தோற்றுவதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.  

“பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில், வீடுகளைப் பெறுவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. செலவும் அதிகம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் பேசரி மற்றும் மஹாபொல கொடுப்பனவுகளைக் கூட, குறித்த காலத்தில் வங்குவதில்லை” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X