2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இராணமடு பகுதி மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராணமடு பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வு நடவடிக்கைகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் ஆராய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இராணமடு, மூங்கிலாறு பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் மணல் அகழ்வு காரணமாக, இராணமடு பிரதான வீதி ஆற்றில் அடித்துச்செல்லும் நிலையேற்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் வகையில், குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஸ்ரீநேசன் எம்.பி, குறித்த பகுதியைப் பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுடனும் விவசாயிகளுடனும் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில், போரதீவுப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனியும் கலந்துகொண்டிருந்தார்.

மணல் அகழ்வால் ஆற்றின் ஆழம் அதிகமாவதன் காரணமாக, நீர்மட்டம் வயல் பிரதேசத்தை விடக் குறைந்துசெல்வதால் எதிர்காலத்தில் குறித்த ஆற்றை நம்பி விவசாயம் செய்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையேற்படுமென, விவசாயிகளால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இராணமடு பிரதான வீதி மிக மோசமான அரிப்புக்குள்ளாகிவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அப்பகுதியிலுள்ள அணைக்கட்டுக்களும் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இராகுலநாயகி, புவிசரிதவியல், கனியவளங்கள் பிரிவு மாவட்ட பொறியியலாளர் ஆகியோருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு, குறித்த பகுதியில் மணல் அகழ்வைத் தற்காலிகமாக நிறுத்தி, குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து, மணல் அகழ்வை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு, ஸ்ரீநேசன் எம்.பி பணிப்புரை வழங்கினார்.

மக்களைப் பாதிக்கின்ற விடயங்களில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமெனவும் இரட்டை முகம் காட்டும் நிலையிருக்ககூடாது எனவும் எம்.பி இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X