2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உயிரிழப்பு, உடமைச் சேதத்துக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யானைகளைப் பிடித்து, ஹொரவப்பொத்தானையிலுள்ள யானை சரணலாயத்தில் விட்டு, அங்கு அவற்றைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, வன ஜீவராசிகள், நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், யானைத் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உடமைகளுக்கு ஏற்படும் சேதத்துக்கும், தனது அமைச்சு இழப்பீடுகளை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.

வன ஜீவரசிகளால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், இன்று (03) காலை நடைபெற்ற போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில், கடந்த மாதத்தில் மாத்திரம், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், அதில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடுகளை வழங்க தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான நிதியையும் திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

வருடமொன்றுக்கு உணவின்மையால், 30 யானைகள் உயிரிழக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், நாளாந்தம் மனிதனை யானைகள் தாக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யானைகளைப் பிடித்து ஹொரவப்பொத்தானையிலுள்ள யானை சரணலாயத்தில் விட்டு, அங்கு அவற்றைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அந்தச் சரணாலயத்தில் 1,000 யானைகளைப் பராமரிக்கக் கூடிய வகையில், அந்தச் சரணலாயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், மின்சார வேலிகளை அமைப்பதற்காக, 5,000 மில்லியன் ரூபாய் நிதி வங்கி வைப்பிலுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனைக் கொண்டு மின்வேலிகளை அமைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, கிழக்கு மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த மின்சார வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களையும் உடமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .