2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘எடுத்துக்காட்டியது ஈழமண்ணாகும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

தமிழகம் அற்புதமான பூமி. ஆனால், தமிழ் என்ற மொழியும் தமிழன் என்ற இனமும் வீரம் கொண்ட ஒரு கறுப்பு முகம்தான்; தமிழன் என, உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழமண்ணாகும் என்று, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் பத்மஸ்ரீ பாரதிராஜா புகழாரம் தெரிவித்தார்.   

அகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும், மட்டக்களப்பு, செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நேற்று (17) மாலை நடைபெற்றது.

அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு.கோபாலக்கிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இயக்குநர் பாரதிராஜா, நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் விதார்த், நடிகை நட்சத்திரா, தொகுப்பாளர் சுரேஸ்காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த 20 மூத்த கலைஞர்களும் 5 இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாரதிராஜா கூறியதாவது, 

“நானும் ஆங்கிலம் கலந்து உரையாடுவேன். ஆனால், இந்த ஈழ மண்ணில், பிரபாகரன் ஆண்ட காலத்தில் அனைத்துமே தமிழிலே இருந்தன.

“புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால், பார்த்தது இந்த பூமியில் மட்டும்தான். வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரைக் கொடுத்து விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனுக்கு ஈடில்லை.

“ஒரு பெண், கழுத்து நிறைய நகை அணிந்து, இரவு 12 மணிக்கு வீதியிலே சென்றுவிட்டுப் பத்திரமாக வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் இந்த நாட்டுக்குப் பெருமையுண்டு, சுதந்திரம் உண்டு என, மகாத்மா காந்தி கூறினார். இது இந்தியாவில் நடக்கவில்லை. ஆனால், அவரது கனவை, ஈழ மண்ணில், வன்னிப் பிரதேசத்தில் நேரடியாகப் பார்த்துள்ளேன்.

“மனிதன் மறைந்து போனாலும் தமது தடையங்களைப் பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும். இந்த மேடையில் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்கள் உங்கள் தடங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.

“ஈழ மண்ணில் அற்புதமான கலைஞர்கள் உள்ளார்கள். பெரிய இலக்கியவாதிகள் உருவாகியுள்ளனர். இயக்குநர் பாலுமகேந்திரா, இந்த மண்ணிலிருந்துதான் வந்திருந்தார். இங்குள்ளவர்களுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால்,  மிகச்சிறந்த கலைஞர்கள் உருவாகுவார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .