2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘காத்தான்குடி நகர சபைக்கு தீயணைப்புப் படை வசதிகள் வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பின் முக்கிய வர்த்தக நகராகவும் கிழக்கு மாகாணத்தில் அதிக சன அடர்த்தியையும் கொண்ட காத்தான்குடி நகர  பிரதேசத்தைப் பரிபாலிக்கும் காத்தான்குடி நகரசபைக்கு தீயணைப்புப் படை வசதி  இருப்பதன் அவசியம் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதாக, நகரசபைச் செயலாளர் எஸ்.எம்.எம். ஷாபி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (19) விவரித்த அவர் மேலும் கூறியதாவது,

“சுமார் 6.5 சதுர கிலோமீற்றர் குறுகிய பரப்பளவுக்குள் கிழக்கு மாகாணத்திலே மிக சன அடர்த்தியும் அதேவேளை மிக முக்கிய சில்லறை, மொத்த விற்பனை வர்த்தக நகராகவும் இயங்கும் காத்தான்குடிப் பிரதேசத்தைப் பரிபாலிப்பதில் தீயணைப்புப் படையின் பங்கு இன்றியமையாததாய் இருக்கின்றது.

“காத்தான்குடி நகர பிரதேசத்தில் 17,467 வீடுகளும் 1,128 கடைகளும், 21 அரசாங்கப் பாடசாலைகளும், 27 முன்பள்ளிப் பாடசாலைகளும், 56 அறபிக் கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்களும், 08 வைத்தியசாலைகளும், 27 சுகாதார பராமரிப்பு நிலையங்களும் 1 பொலிஸ் நிலையம், 1 பிரதேச செயலகம் ஆகியவை உள்ளன.

“இத்தகையதொரு சன அடர்த்தியும், கட்டடங்களின் பெருக்கமும் பரபரப்பும் மிக்க நகரப் பகுதிகளில் தீ விபத்துகள் அடிக்கடி இடம்பெற வாய்ப்புள்ளது.

“அவ்வாறான பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துமுள்ளன. சமீப பாலங்களுக்குள்ளாக பாரிய 5  தீ விபத்துச் சம்பங்கள் காத்தான்குடி நகரில் இடம்பெற்றுள்ளன.

“ஆயினும், காத்தான்குடி நகரசபைக்கு தனியானதொரு தீயணைப்புப் படை வசதி இன்னமும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையில் மாத்திரம் தீயணைப்புப் படைப் பிரிவு இயங்கி வருகின்றது.

“காத்தான்குடிப் பிரதேசத்தில் தீ விபத்துச் சம்பவங்கள் ஏற்படும்போது நெருக்கமான இந்த வர்த்தக நகரில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடும் என்பதால் காத்தான்குடி நகரசபைக்கென்றே தனியான ஒரு தீயணைப்புப் படைப் பிரிவு இருப்பதன் அவசியம் காலத்தின் தேவையாக வலியுறுத்தப்படுகின்றது.

“உள்ளூராட்சி மன்ற ஆளுகைக்குள் மாநகர சபையும் அதனையடுத்து, நகர சபையும் தமக்கான தீயணைப்புப் படைப் பிரிவைக் கொண்டிருப்பது அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .