2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சிசு ஒன்றை வீட்டில் பிரசுவித்து, அந்தச் சிசு மரணித்துள்ளதாக மையவாடியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

இதனையடுத்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எல்.எம். றிஸ்வான் முன்னிலையில் நேற்று (08)  தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளையின் தாயார் கருவுற்றுள்ள நிலையில், இம்மாதம் 2ஆம் திகதி சிசுவொன்றை வீட்டில் பிரசுவித்துள்ளார். பின்னர் சிசு மரணித்து பிறந்துள்ளதாக, அப்பகுதி பள்ளிவாசலுக்கு அறியப்படுத்தி, சிசுவின் சடலத்தை பூநொச்சிமுனை மையவாடியில் புதைத்துள்ளனர்.

இதன்பின்னர் சிசுவை பிரசுவித்த தாயார் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையை நாடிய நிலையில், அந்த வைத்தியசாலை வைத்தியர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற தாயாருக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர்களான டொக்டர் சி.எஸ். ஜலப்பெருமா, டொக்டர்  ஈ.டபிள்யூ.என்.ஈ. சாமிக்க, டொக்டர் எஸ்.சிவகாந்தன் ஆகியோரின் மேற்பார்வையில், சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .