2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’சிறுபான்மையினரின் உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் யாப்பே நாட்டுக்கு தேவை’

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்,  எப்.முபாரக்

நாட்டில் உள்ள  சிறுபான்மையினரின் உரிமையை உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது  நாட்டிற்கு  தேவை என, கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போது  உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்து வினவியபோதே  அவர் இதனைக் கூறினார்.

ஒருமித்த நாடா, ஒற்றையாட்சி நாடா என்ற விவாதத்திற்கு அப்பால்சென்று  தற்போது  தமக்கான  அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா?  அனைத்து இனங்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு விடை காண சமூகம் முன்வரவேண்டும்.

தற்போது  சில  அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஒருமித்த நாடு என்ற பதத்தை  முன்வைத்து  பாரிய குழப்பங்களை  ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்.

இதனூடாக பெரும்பான்மை  மக்களை குழப்பி உத்தேச அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமாயின் அதனை தோற்கடித்து  நாட்டில்  தொடர்ச்சியாக சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து  அதில் தமது  அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு சில  குழுக்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்  இவர்களுடன்   இணைந்து  சில  சிறுபான்மையின  அரசியல்வாதிகளும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு  அப்பால் சென்று, புதிய அரசியலமைப்பில்  கூறப்படாத  வடக்கு கிழக்கு  இணைப்பு   போன்ற விடயங்களை  கூறி  மக்களுக்கிடையே  வீணான பிரச்சினைகளை உருவாக்கி சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைப்பதை விரும்பாத பெரும்பான்மை  அரசியல்வாதிகளுக்கு துணைபுரிந்து  வருகின்றனர்.

ஆகவே,  எமது  சமூகம்  தேவையற்ற பீதிகளை   ஏற்படுத்துவோரின்  கருத்துக்களுக்குள் முடங்கியிராமல்  அரசியலமைப்பின் இடைக்கால  அறிக்கை  குறித்து  தெளிவான கருத்தாடல்களை  ஏற்படுத்தி அது குறித்த  விவாதங்களை  முன்னெடுத்து  சிறுபான்மை சமூகத்துக்கான  சாதக பாதகங்கள்  குறித்து  தெளிவாக  ஆராய முன்வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .