2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘தமிழனுக்கு அடையாளம் மொழி தான்’

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் தாமென்றும், மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் தாம் தமிழராக இருக்க முடியாதென்றும், அடையாளமான மொழியை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (21) காலை இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றறுகையில், உலகத்திலே தன்னுடைய பிறப்புக்குக் காரணமாக இருந்த சூரியனை வழிபடுகின்ற ஒரு இனமாக தமிழினம் இருக்கின்றது. திருவள்ளுவரின் பிறப்பில் இருந்துதான் எமது காலம் கணிக்கப்படுகின்றது. திருவள்ளுவரின் பிறப்பில் இருந்து 2050ஆம் ஆண்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது பல இலக்கியங்கள் பொங்கலைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன. இன்று இந்தப் பொங்கல் தினத்தைப் பல்வேறு நாடுகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன என்றார்.

அத்தோடு, தமிழர்களின் திருநாள் என்று சொல்லப்படுகின்ற இந்தப் தைப்பொங்கல் தமிழர்களின் அடையாளம் இருக்கும் வரையில் தான் இருக்கும். பொங்கலை யாரும் பொங்க முடியும் ஆனால் இதனைத் தமிழன் பொங்க வேண்டும் என்றால் தமிழன் தமிழ் உணர்வை தன்னுள் தக்க வைத்திருக்க வேண்டும். தமிழன் தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். தமிழனுக்கு அடையாளம் எமது மொழிதான் அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது. வெறுமனே கலாசாரமாக தைப்பொங்கலைப் பின்பற்ற முடியாது. சிலாபம், முன்னேச்சரம், தொண்டீஸ்வரம், கதிர்காமம் போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் தற்போது எங்கே? தன்னை மறந்து, தன் நாமம், மொழி, இனம் மறந்து மாறிப் போய் விட்டான். மொழியை நாங்கள் இழந்தோமானால் எமது வாழ்வையே நாம் இழந்து விடுவோம் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X