2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு கூடாது’

Editorial   / 2018 மே 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகின்ற நிதி, யுத்தப் பாதிப்பு, வறுமை, விகிதாசாரம் போன்ற அடிப்டையில் ஒதுக்கீடு செய்யப்படவேண்டுமென்று, ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக, இன்று (17) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்த வேண்டுகோளை வித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 14 பிரதேச செயலகங்கள் உள்ள நிலையில், இவற்றில் கடந்த காலத்தில் மத்திய அரசு, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகம், மாவட்டத் திணைக்களங்கள், அரச, நிறுவனங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை, அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனினும், நிகழ்காலங்களில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பல ஆரோக்கியமான விமர்சனங்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடக்கம் சமூக அமைப்புகள், பொதுமக்கள் வரையும் உள்ளன.

“கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பாக ஆரோக்கியமான மீளாய்வு செய்வதனூடாகவே, எதிர்காலத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யமுடியும். இனம், சமூகம், பிரதேசம், கட்சி வாக்காளர்கள் எனப் பார்த்து நிதி ஒதுக்கீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கமும் மாகாண சபை அமைச்சர்களும், கடந்த காலத்தில் ஒரு பக்கச்சார்பாக நிதி ஒதுக்கீடு செய்தமைக்குப் பல ஆதாரங்கள் உள்ளன என, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில், அமைச்சுப் பொறுப்புகளும் கடமைகளும், ஓர் இனத்தைச் சார்ந்தவையல்ல. தெரிவுசெய்யப்படும் அமைச்சர்கள் இனம், மதம் பார்த்து நிதி ஒக்கீடு செய்யக்கூடாது. தெரிவுசெய்யப்பட்ட அனைத்து அமைச்சர்களும், அனைத்து இன மக்களுக்காகவே தெரிவு செய்யப்பட்டார்கள்.

“இன முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வார்களாக இருந்தால், பொறுப்புக் கூறவேண்டிய கடமை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உரித்தானதே என்பதைப் புரிந்து கொண்டு, நிதி ஒதுக்கீடு தொடர்பாகச் சரியாகச் செயற்படவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .