2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நுண்கடன் பிரச்சினைகளை ஆராய குழுக்கள் நியமனம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரத்திலுள்ள அனைத்து பெயர்பலகைகளிலும் தமிழ் எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்தல் மற்றும்  நுண்கடன் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக மாநகர உறுப்பினர்கள் தலைமையில் இரு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 8ஆவது அமர்வு, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.

மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகரசபைச் செயலாளர் உள்ளிட்டோரும் இந்த அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள் மற்றும் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் என்பன சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கிகாரம் பெறப்பட்டன.

திண்மக்கழிவகற்றலுக்கான மேலதிக வாகனக் கொள்வனவு, வாகனங்கள் திருத்த வேலைகள், மாநகரசபை பாலர் பாடசாலைகளின் தரமுயர்வு, மட்டக்களப்பு மாநகரசபையை அழகுபடுத்துதல் திட்டத்துக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையிலுள்ள மாநகரசபையின் நிதியைப் பயன்படுத்துதல், மாநகர சபை மேலதிக கடமை புரிந்த ஊழியர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவுகள் போன்ற பல முன்மொழிவுகள், நிதிக் குழுவின் சிபாரிசுகளில் முன்மொழியப்பட்டு சபையில் அங்கிகரிக்கப்பட்டன.

அத்துடன், வீதிகளுக்குப் பெயர்களை மாற்றுகின்ற விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவில், குழுவொன்று அமைக்கப்பட்டு அவ்வறிக்கையின் மூலம் இதனை நிவர்த்தி செய்யும் நடைமுறைகளை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பெயர்பலகைகளிலும் இடம்பெறுகின்ற தமிழ் எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா தலைமையிலான குழுவொன்றும், அதேபோன்று நுண்கடன் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாநகர சபை உறுப்பினர் இரா.அசோக் தலைமையிலான குழுவொன்றும் சபையால் நியமிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X