2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பட்டதாரிகளை வித்தியாசமின்றி அரச நியமனத்துக்கு உள்வாங்கவும் ’

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன்

உள்வாரி, வெளிவாரி என்ற வித்தியாசமின்றி, அனைத்துப் பட்டதாரிகளையும் அரச நியமனத்துக்குள் உள்வாங்கும் செயற்பாட்டை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பட்டதாரிகள் தங்களுக்கு தொழில்வாய்ப்பு தரவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக தொடர்ச்சியாக சுமார் 154 நாட்களையும் தாண்டிப் போராட்டத்தை நடத்தினர்.   

“இதனப்படையில், பட்டதாரிகளை பயிலுனர்களாக நியமித்து, அவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சிகளை அளித்ததன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்டது. தொடந்து பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் ஏனைய சில மாவட்ட செயலகங்களிலும் நடத்தப்பட்டது.

“இதன்போது பட்டதாரிகளை உள்வாரிப் பட்டதாரிகள், வெளிவாரிப் பட்டதாரிகள் என்று  வகைப்படுத்திப் பார்க்காமல் அந்த நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்குப் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.

“எனினும், உள்வாரிப் பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அடுத்த கட்டத்தில் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

 “இரண்டாவது கட்டத்தில் பட்டதாரிகளை உள்வாங்கும்போதிலாவது  வெளிவாரிப் பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என்ற ஒரு கனதியான எதிர்பார்ப்புடன் வெளிவாரிப் பட்டதாரிகள் இருந்து வருகின்றனர்.

“ஆனால்,  அரசாங்கத்தால் அந்த வெளிவாரிப் பட்டதாரிகள் பற்றிய சிந்தனைகள் இன்னும் கவனத்தில் கொண்டுவரப்படவில்லை என்பது போலத் தோன்றுகிறது. இந்த நிலைப்பாடு மிக வேதனைக்குரியது.

“உள்வாரி பட்டதாரிகளாக இருக்கலாம், வெளிவாரிப் பட்டதாரிகளாக இருக்கலாம், இரு சாராரும் இலங்கை அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகங்களில்  அந்தப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டப்படியே கற்று சித்தியடைந்து வந்துள்ளபோது, வெளிவாரிப் பட்டதாரிகளை புறக்கணித்து செயற்படுவதென்பது அவர்களது தொழில்வாய்ப்பு பெறும் உரிமையை மீறுகின்ற செயலாக அமையலாம்.

“உள்வாரிப் பட்டதாரிகள் ஒரு தொகுதியினருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கிய நிலையில், வெளிவாரிப் பட்டதாரிகள் எவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது என்பது அவர்களுக்கு ஒரு மன உழைச்சலை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக இருப்பது என்பது மட்டுமல்லாமல், இவர்கள் தமது வயது எல்லையைக் கூட தாண்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

“எனவே, பொறுப்புள்ள அரசாங்கம் உள்வாரி வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை கொடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X