2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு; ஐவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஜனவரி 03 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05  பேருக்கு எதிரான விளக்கமறியல் நாளை (04) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில், இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

நேற்றையதினம்,  மட்டக்களப்பு சிறைச்சாலையின் இரண்டு உத்தியோகத்தர்களிடம் விசாரணைகள் இடம் பெற்றன. இந்த விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள,

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இரானுவ சிப்பாயான மதுசிங்க(வினோத்) ஆகியோரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் காலையில் ஆரம்பமாகி மாலை வரை நீடித்தது.

இந்த வழக்கை யொட்டி மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் பொலிசார் மேலதிகமாக குவிக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 8.3.2017 அன்று இடம் பெற்ற வழக்கின் போது சந்தேக நபர்களுக்கு தனித்தனியோ வாசித்துக் காட்டப்பட்டு சந்தேக நபகர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்றைய இந்த வழக்கின் போது சந்தேக நபர்களை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில், நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05  பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .