2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரச்சினைகளைத் தீர்க்குமாறு விவசாயிகள் வேண்டுகோள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமீபத்தில் உன்னிச்சைக்குளம் மடை திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நீரோட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்குமாறு, உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை, இன்று (02) சந்தித்த போதே, மேற்படி வேண்டுளை அமைச்சரிடம் அவர்கள் விடுத்தனர்.

அனுராதபுரத்திலுள்ள அமைச்சரின் வாஸஸ்தலத்தில் அமைச்சரைச் சந்தித்த உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தலைமையில் சென்ற விவசாயிகள் குழுவினர்,  தாம் தற்சமயம்  எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த மகஜரையும் அமைச்சரிடம் கையளித்தனர்.

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமது பிரதேச விவசாயிகளுக்கான எந்தவிதமான வேலைத் திட்டத்தையும் கடந்த மே மாதம் 25ஆம் திகதியிலிருந்து நீர்ப்பாசன அதிகாரிகள் செய்து தரவில்லை.

“உன்னிச்சைக்குளம் மடை திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின்  மனக்குமுறல்களை அறிந்து சிபார்சுகளைச் செய்வதற்காக அமைச்சு மட்டத்திலிருந்து சுயாதீன குழுவொன்றை அனுப்ப அமைச்சர் கடந்த மாதம் இணங்கியிருந்தும் அக்குழு இன்னமும் களத்துக்கு வரவில்லை.

“மேலும், உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்டத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளரின் சேவையில் பிரதேச விவசாயிகள் திருப்திப்படாததால் அவரை இடமாற்றம் செய்து விவசாயிகளின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் உள்ள புதிய அதிகாரியை நியமிக்குமாறும் கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நாளை மறுதினம்  (04) தனது குழுவினருடன் தான் நேரடியாக உன்னிச்சைக்குளப் பிரதேசத்துக்கு வருகை தந்து விவசாயிகளின் நிலைமைகளை ஆராயவுள்ளதாக வாக்குறுதியளித்தார்.

கடந்த மே மாதம்  24ஆம் திகதி உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தை அண்டிய சுமார் 6,000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .