2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பிரித்தானியரின் தந்திரம் உயிரூட்டப்பட பேரினவாதிகளுக்கு பிரித்து ஆழ இடமளியோம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியரின் பிரித்து ஆழும் தந்திரம் உயிரூட்டப்பட, இனிமேல் பேரினவாதிகளுக்கு, சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் இளைஞர்களுக்கான தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்டத்தின் முதலாவது நிகழ்வு, அதன் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, ஏறாவூர், அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாங்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து, கிழக்கு மாகாண ஆட்சியை நடத்திய வேளையில் பல விதங்களில் விமர்சிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தினுடைய வாழ்வும் நலமும், இம்மாகாணத்திலே வாழும் மூவின மக்களின் உறவோடூதான் என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

எங்களுக்கிடையில் குறிப்பாக சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் ஏற்பட்டால், அதுதான் இந்த நாட்டில் பேரினவாதிகளின் வெற்றியாகக் கொண்டாடப்படுமெனத் தெரிவித்த அவர், பேரினவாத அரசியலாளர்கள் கையாளுகின்ற ஒரு தந்திரோபாயமாகவும் அதுதான் இருந்து வந்துள்ளது என்றார்.

இதேவேளை, முன்பு எங்களை ஆட்சி செய்த “பிரித்தானிய” அரசாங்கம், எங்களைப் பிரித்துத்தான் வைத்து ஆட்சி புரிந்ததாகவும் “பிரித்தானியர்கள் பிரித்தாழும்” தந்திரத்தையே கையாண்டமார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் நாட்டை விட்டுச் செல்லும்பொழுது தாம் பிரித்தாண்ட தந்திரத்தையே பேரினவாதிகளிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் எனவும் ஆனால், இந்த பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேலும் உயிர்ப்பூட்டும் பேரினாவாதிகளின் நடவடிக்கைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இனியொரு போதும் இடமளிக்காது, விலைபோகவும் மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .