2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டு. மாநகர சபையில் தீர்மானம்

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக, மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் இன்றைய (01) 11ஆவது அமர்வின் போதே, இத்தீர்மானம், மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில், சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வமர்வில் மாநகர பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மாநகரசபையின் மாதாந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன.  

விசேடமாக, 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி, வெகு நாள்களாகப் போராடி வரும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அவர்களது நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்த்து, ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் மாநகர மேயரால் தீர்மானம், சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரினதும் ஒருமித்த கருத்துடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரரால் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் தாக்க முற்பட்ட செயற்பாட்டுக்கு எதிப்புத் தெரிவித்தும், அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அச்செயற்பாட்டுக்கான கண்டனம் தெரிவிக்கும் முகமாகவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனித நகரமாக்கும் ஆலய பரிபாலன சபையின் முடிவை ஆதரிக்கும் முகமாகவும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .