2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையின் 14ஆவது அமர்வு

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையின் 14ஆவது அமர்வு, மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (03) இடம்பெற்றது. இது இவ்வருடத்துக்கான முதலாவது அமர்வாகும்.

இவ் அமர்வில் மாநகர பிரதி மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகர மேயரின் முன்மொழிவுகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், ஏனைய நிலையியற் குழுக்களின் சிபாரிசுகள், பிரேரணைகள் எனப் பல்வேறு அம்சங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், மாநகர சபையின் புதிய ஆண்டுக்கான நிலையியற் குழுக்கள் தெரிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஏற்கெனவே அமைக்கப்பட்ட நிலையியற் குழுக்கள் அவ்வாறே செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் பூபாளராஜா, புதிதாக அனைத்து நிலையியற் குழுக்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிலையியற் குழுக்களைப் புதிதாக அமைப்பதா அல்லது இருக்கின்ற குழுக்கள் அவ்வாறே இயங்குவதா என்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், அமைக்கப்பட்ட நிலையியற் குழுக்கள் அவ்வாறே தொடர்ந்து இயங்குவதற்கு ஆதரவாக 30 வாக்குகளும், எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உட்பட 06 வாக்குகளும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினர் நடுநிலைமை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ஏற்கெனவே உள்ள நிலையியற் குழுக்கள் அவ்வாறே தொடர்ந்து இயங்குவதென்ற தீர்மானம் 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், விசேட தேவையுடையோர், தாய்சேய் நலன், நுண்கடன் தொடர்பிலான விடயங்களுக்காக விசேடமாக புதிய குழுவொன்றும் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் 04 பெண் உறுப்பினர்கள் உட்பட ஆறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அமர்வின் இறுதியில், அண்மையில் இறைபதம் எய்திய அமரர் பிறின்ஸ் காசிநாதர் மற்றும் அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர் ஆகியோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .