2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. அரசடி கிராம சேவையாளர் பிரிவு முடக்கம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவபர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரில், அரசடி சந்தை வீதியிலுள்ள வீடொன்றில் 79 வயது ஆணொருவர், நேற்று (16) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மேற்படி நபரின் மரணத்துக்குப் பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், மரணித்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு பொதுச் சந்தையும் மூடப்பட்டுள்ளது. அத்துடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், வீதி போக்குவரத்து அனுமதி வழங்கும் காரியாலயம் என்பனவற்றுக்குச் செல்லும் வீதியும் முடக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் 27 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இதுவரையான தொற்றாளர்களின் எண்ணிக்கை 467ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .