2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன்  

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டடுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமையை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்று தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று  (31) நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 23ஆவது படைப்பரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர, வைத்தியர்கள், சுகாதாரப் வைத்திய அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் தமது அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் வரும்போது சமூக இடைவெளியைப் பேணி நடந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடயங்களை மேலும் மேம்படுத்துவதுத் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.

இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் பொருள்களைக் கொள்வனவு செய்யவரும் பொதுமக்களின் நெரிசலைக் குறைக்கும் விதத்தில், பொதுச்சந்தைகளை மூடி மட்டக்களப்பு வெபர் மைதானம், கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானம், ஊரணி சரஸ்வதி வித்தியாலய மைதானம் உட்பட ஊரணி லீனர் பாக் போன்ற நான்கு இடங்களிலும் அத்தியவசிப் பொருள்களை  விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், சகல பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகளையும் திறந்திருப்பது எனவும் ஏனைய அனைத்துக் கடைகளும் திறக்காதிருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், அத்தியாவசியப் பொருள்களை நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்ய, பிரதேச செயலாளர்களின் சிபாரிசுடன் பொலிஸ் அனுமதியைப் பெற்றுச் செயற்பட ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன்,  அந்த வாகனங்களுக்கான விசேட ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையை மேற்கொள்வது எனவும், அத்தியவசிய சேவை உத்தியோகத்தர்கள் தமது அலுவலக அடையாள அட்டையையும், திணைக்களத்தலைவரின் கடிதத்தையும் இணைத்து அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளைப் பிரதேசத்தில் இருந்து மரக்கறிவகைகளைக் கொண்டுவருவதில்லை எனவும் உள்ளுர் உற்பத்திகளை மாத்திரம் பயன்படுத்துவது எனவும் இந்நடைமுறையை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில், மிக அவசியத் தேவை ஏற்படின் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியில் வரலாம் எனவும் அனைவரும் வீடுகளில் இருந்து தமது குடும்பத்தையும் சமுகத்தையும், மாவட்டத்தையும் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு மாவட்டச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .