2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு வடக்கு விவசாயக் கண்டப் பகுதியில்  ஆற்று மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி, விவசாயிகள், நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாமடு விவசாயக் கண்ட விவசாயிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், அப்பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வயல்கள் வழியாகக் கொண்டு செல்வதால், தமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

முந்தன்குமாரவெளி என்னுமிடத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதியைப் பெற்று, பாலாமடு பகுதியில் இரவு - பகலாக மணல் அகழப்படுவதாகவும் அகழப்படும் மணலை, வயலுக்குள் குவித்து வைத்துள்ளார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாகப் பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் மணல் அகழ்பவர்களுக்குச் சார்பாகவே நடந்துகொள்கின்றனர் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.

உழவு இயந்திரங்களை, ஆறுகளில் இறக்கி மணல் ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தத் தடையையும் மீறி மணல் ஏற்றுகிறார்கள் என்றும் விவசாயிகள் விசனம் தெரிவித்தனர்.

இந்த பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மணல் அகழப்படுவதால் ஆற்றின் அகலம் அதிகரித்து பல ஏக்கர் வயற் காணிகளை இழந்துள்ளோம் எனக் கவலை தெரிவித்த விவசாயிகள், எனவே, இந்தப் பிரதேசத்தில் மணல் அகழ்வதை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைத்தனர்.

இதேவேளை, விவசாயச் செய்கையைப் பாதுகாப்பதற்காக, காட்டு விலங்குகளுக்காகப் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நாசம் செய்வதால், காட்டு யானைகள் வயல்களைத் துவம்வம் செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .