2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவனின் சடலம் மீட்பு; இருவர் வைத்தியசாலையில்

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் குளத்தில் குளிக்கச் சென்ற ஐவரில், மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், பலாச்சோலை எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசா ஜெயசுதன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

காணாமல்போன குறித்த மாணவனைத் தேடும் பணிகளில், மீனவர்களும் பிரதேச மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்த வேளையில், இன்று (07) காலை 6 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது.

நண்பர்களான குறித்த ஐவரும், உறுகாமக் குளக்கரையில் காணப்பட்ட ஒரு தோணியை வலித்துக் கொண்டு, குளத்தின் நடுவே அமைந்திருக்கும் உம்மாரிக்கல்முனை எனும் கற்பாறைக்குச் சென்ற போது, இவர்கள் சென்ற தோணி, பலத்த கச்சான் காற்றுக் காரணமாகப் புரட்டிப் போடப்பட்ட போது, தோணியில் பயணித்த ஐவரில் ஒருவர் காணாமல் போக, இருவர் நீந்தித் தப்பியுள்ளனர். இவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேவேளை, குளத்தில் மூழ்கிய நிலையில் கொம்மாதுறையைச் சேர்ந்த விஜயநாதன் விஜயகாந்தன் (வயது 21), தங்கராசா ஜெயசுதாகரன் (வயது 19) ஆகிய இருவரும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவனின் சடலம், உம்மாரிக்கல்முனை கற்பாறையிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில், தோணி கவிழ்க்கப்பட்ட சுற்றுவட்டாரத்தில் நீரில் அமிழ்ந்த நிலையில், காணப்பட்டதென மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .