2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மிறாவோடை காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படுமென, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணிப் பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் கோரளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (19) இடம்பெற்றது.

மீறாவோடை காணிப் பிரச்சனை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு இரு தரப்பாரும் தீர்ப்புக் கிடைக்கும் வரை காணிக்குள் செல்வதில்லை என்றும், தீர்வு பாடசாலைக்குச் சாதகமாகக் கிடைக்கும் பட்சத்தில் காணி உரிமை கோருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், காணி உரிமை கோருவோருக்கு தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காணியை விட்டுக் கொடுப்பது என்றும், அக்காணிக்கு மாற்றுக் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இரு சமூகங்களுக்கிடையில் உள்ள காணிப் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் தரப்பினர் ஒருவரைக் கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் என்று, கோரளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதில் கோர​ளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ்.பெரமுன, மிறாவோடை சக்தி வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் காணிக்கு உரிமை கோரும் இரு தரப்புகளின் பிரதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .