2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்’

Editorial   / 2018 ஜனவரி 08 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கூறி, பெண்களின் அரசியல் ஜனநாயக உரிமைக்கு முட்டுக் கட்டையாக இருக்க வேண்டாம்” என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹொட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“யாருக்கும் வாக்களிக்க வேண்டாமென, யாரும் பிரசாரம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது ஜனநாயகத்தை மீறுகின்ற செயற்பாடாகும். இவ்வாறான முறைப்பாடுகள் பல புத்தளம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப் பெற்றன. இவ்வாறான பிரசார நடவடிக்கைகளில் ஓர் அமைப்பினரே செயற்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.  

“ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்திலும் 25 சதவீதமான உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது புதிய தேர்தல் முறையின் கீழ் இருக்கின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும். 

“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கோஷம், பெண்களின் அரசியல் உரிமைக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைகின்றது. இதனால், ஜனநாயக ரீதியாக பெண்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் முடியாத சூழ்நிலைக் காணக்கூடியதாகவுள்ளது” என்றார். 

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு, தனியான பிரதேச சபை வேண்டுமென பல்வேறு சிவில் அமைப்புகளும் வேண்டியிருந்தார்கள். அந்த வேண்டுகோளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாததால் அந்தப் பிரதேசத்தில் ஒரு சுயேட்சைக்குழுவொன்று போட்டியிடுகின்றது. 

“அந்தப் பிரதேசத்தில், ஆறு வட்டாரங்களில் போட்டி இடம்பெறுகின்றன. 

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அனைவரிடமும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அரசியல் உரிமை, ஜனநாயக உரிமை எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய மிக முக்கியமான உரிமையாகும்” என்றார். 

“கட்சிக்கோ, சுயேட்சைக்குழுவுக்கோ, வாக்குகளை வழங்குவதா, இல்லையா என்பதை வாக்காளர்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“யாழ்ப்பாணத்தில், சிவசேனா எனும் ஓர் அமைப்பினர், இந்து மத வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பிரதேசத்தில் போட்டியிடுகின்ற கத்தோலிக்க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது, தேர்தல்கள் விதிமுறைகளின் பிரகாரம் தவறானதாகும்.  

“எந்தவொரு பிரதேசத்திலும், சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும். கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம், இந்து வேட்பாளர்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்கு, யாருக்கும் உரிமை கிடையாது. 

“யாருக்கு வாக்களிப்பது என்று வேட்பாளர்கள் தீர்மானிக்க முடியாது. அதனை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த காலத்தில் வட மாகாணத்தில் பௌத்த மத குருக்களை கொண்ட கட்சி போட்டியிட்டது. சுதந்திரமாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். ஆனால் வாக்காளர்கள் தீர்மானித்தார்கள். 

“அதேபோன்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக போட்டியிடுவதாகக் கூறி, தற்போதைய வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சுயேட்சையாகப் போட்டியிட்டார். இந்நிலையில், அனைவரும் எங்கும் போட்டியிடக் கூடிய கலாசாரத்தை கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் ஏற்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .