2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொட்டு அணியினர் மு.காவுக்கு தாவினர் ஏறாவூரில் திடீர் திருப்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 21 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு அணியின் சார்பில் ஏறாவூர் நகர சபைக்கான வேட்பாளர்கள் அனைவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் பக்கம் தாவியுள்ளனர்.

 

இந்தத் திடீர் வருகை, ஏறாவூரில் நேற்று (20) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபைக்கான வேட்பாளர் கே.எல். அக்கீல் அர்சாத் தலைமையிலான குழுவினரே, இவ்வாறு  ஸ்ரீல.மு.கா பக்கம் தாவியுள்ளனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி ஏறாவூர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில், தாமரை மொட்டு வேட்பாளர்களின் இந்த கட்சித் தாவல் இடம்பெற்றுள்ளது.

தாமரை மொட்டுக் கட்சியின் தலைமைகள் ஏறாவூர் பகுதியில், தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அக்கட்சி சார்பிலான அபேட்சகர்களை புறக்கணித்துள்ளதாக, அதிருப்தியாளர்களான வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏறாவூரில் நேற்று (20) இரவு நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி பிரசார மேடைக்கு திடீரென வந்தமர்ந்த அவர்கள் அனைவரும், முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உடன் தாங்கள் நிபந்தனையின்றி இணைந்து கொள்வதோடு அந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரின் திட்டமிட்ட பெரு நகர அபிவிருத்திக்கான குறிக்கோளை முன்னாள் முதலமைச்சர் கொண்டிருப்பதால் தாங்கள், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அணியில் இணைந்து கொண்டிருப்பதாக, அக்கீல் அர்சாத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .