2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’வைத்திய நிபுணரை மீண்டும் நியமிக்குக’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொது வைத்திய நிபுணரை, மீண்டும் பெற்றுத்தரக்கோரி, பொதுமக்களாலும் பொது அமைப்புகளாலும், ஆர்ப்பாட்டமொன்று, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (21) நடத்தப்பட்டது.

பல்வேறு பௌதீக வளகட குறைபாடுகளுக்கு மத்தியிலும் வைத்தியர் பற்றாக்குறையுடனும் இயங்கிவரும் இவ்வைத்தியசாலையில், ஏற்கெனவே கடமையில் இருந்து வந்த பொது வைத்திய நிபுணர், கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, வைத்திய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

உடனடியாகப் பதிலீடு செய்யப்பட்டு, பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதிருக்கும் வைத்திய அத்தியட்சகரை இடம்மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரி நின்றனர்.

இதன் பின்னணி பற்றி தெரியவருவதாவது:

மேற்படி பொது வைத்திய நிபுணரான யாமினி டி சில்வா என்பவர் தங்கியிருந்த விடுதிப் பக்கம், பட்டாசுகள் விழுந்து, கனதியான சத்தங்களுடன் வெடிக்கத் துவங்கியுள்ளது.

இது, வைத்தியருக்கு அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, அவ்விடுதியில் கூரை ஓடுகளும் வேலிகளும் சேதப்படுத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதுபற்றி அவ்வைத்தியர், தனது மேலதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

வைத்தியரின் அசௌகரியத்தைக் பரிசீலித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கச் சிபார்சுக்கமைய, அவ்வைத்தியரை அவரது சௌகரியத்துக்கு ஏற்றவாறு கடமை புரியும் வண்ணம், சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .