2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனர்த்தப் பாதுகாப்புக்கு வலியுறுத்தல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

பெருந்தோட்டப் பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றானாலும்கூட, அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக, விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் லிந்துலை, அக்கரப்பத்தனை பிரதேசத் தலைவர்களுக்கான கலந்துரையாடல், மன்றாசி விளையாட்டுக் கழக மண்டபத்தில், நேற்று (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மலையகத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்துவரும் சீரற்ற மழை வானிலை காரணமாக, மக்களின் வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்ததோடு, இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில், விசேட கலந்துரையாடலொன்று இன்று (20) இடம்பெறவுள்ளதெனத் தெரிவித்தார்.

“மலையகத்தின் தற்போதைய நிலை குறித்து, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுக்கு தெளிவுபடுத்தினேன். அதற்குப் பதிலளித்த அவர், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக, பாதிப்புகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுத் தருமாறு கோரியதுடன், அறிக்கை கிடைத்ததன் பின்னர், உரிய நடவடிக்கையைத் தான் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்” என்று அவர் மேலும் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், கிராம சேவகர்களின் பங்கு மிகவும் அளப்பரியது எனத் தெரிவித்த அவர், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கிராம உத்தியோகத்தர்கள், மனிதாபிமான ரீதியாக உதவுவதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போதைய சூழலில், கிராம சேவகர்கள், சுற்று நிருபத்துக்குள் கட்டுப்பட்டுக் கடமையாற்றுவதைத் தவிர்த்து, மனிதாபினமான ரீதியாக பணியாற்ற முன்வர வேண்டும் என்றும், அவர் அழைப்பு விடுத்தார்.

கிராம சேவகர்கள், மனிதாபிமான ரீதியில் செயற்படுகின்ற போது, ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களைப் பாதுகாக்க தாம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .