2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கடன்​ பெறும் எல்லை அதிகரிப்பையே எதிர்த்தோம்’

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லை அதிகரிப்புக்கே எதிர்ப்பு வெளியிட்டதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மாறாக அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

கண்டிக்கு இன்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

ஆளுங்கட்சியால்  நாடாளுமன்றத்தில் நேற்று (20)  இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்றும் அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன என்றும் கூறினார்.

“ஒன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமானது. மற்றையது கடன் எல்லையை அதிகரிப்பது. இவ்விரண்டு பிரிவுகளிலும் கடன் எல்லையை அதிகரிக்கும் விடயத்துக்கே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். அபிவிருத்தி நடவடிக்கை சம்பந்தமான யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது” என்றும் கூறினார்.

எனவே, மக்கள் நலன்சார் அரசாங்கமாக இருந்திருந்தால், அபிவிருத்தி சம்பந்தமான யோசனையை முன்வைத்துவிட்டு, மற்றையதை மீளப்பெற்றிருக்கும் என்றும் ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ இரண்டையும் வாபஸ் பெற்று விட்டனர் என்றும் தெரிவித்தார்.  

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அதன்போது கடன்களை மீள் செலுத்துவதற்கு மேலும் மூன்றாண்டுகள் அவகாசம் வேண்டும் என கோரினார். நிலைமை இப்படியிருக்கையில் மேலும் கடன்களை பெற எவ்வாறு அனுமதிக்க முடியும்? எனவேதான் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது” என்றார்.  

அதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்து கிடைக்கும் சிறந்த ஆணையின் பிரகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .