2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கொட்டகலை என்பது எமது கோட்டை’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள் வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்புத் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவேன்” என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை மேபீல்ட், சாமஸ் தோட்டத்தில், இன்று (9) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த, “எவ்வித நிபந்தனையும் இன்றியே ஆயிரம் ரூபாய் அவசியம் என அப்பா வலியுறுத்தியிருந்தார். எனவே, நிபந்தனைகளுடன் ஆயிரம் ரூபாயை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. இன்று சில துரைமார் ஆட்டம் போடுகின்றனர். தேயிலைக் கொழுந்து, இரண்டு கிலோ, மூன்று கிலோ கூடுதலாக பறிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆடட்டும். எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டப்படும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம்.

“தனிவீட்டுத்திட்டத்தை கடந்த காலத்தில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலவே முன்னெடுத்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே வீடுகள் என்றனர். ஆனால், மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது திட்டம். அத்துடன், பொருளாதாரமும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதிப்பாய்ச்சல் எம்மை சூழவே இருக்கவேண்டும்.

“ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம் தந்து பாருங்கள், ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன். கண்டியில் போட்டியிடும் எமது இளம் வேட்பாளர் பாரத் அருள்சாமி என்ன செய்யப்போகின்றேன் என கூறி வாக்கு கேட்கின்றார். ஆனால், இவர் பிரதிநிதித்துவத்தை அழிக்க வந்துள்ளார் எனக்கூறியே மற்றவர்கள் வாக்கு கேட்கின்றனர்.

“அதேபோன்று பதுளையில் செந்தில் தொண்டமான், 10 வருடங்களாக மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார். அவர் திடீரென வானத்தில் இருந்து குதித்தவர் அல்லர். எனினும், இவர் எதனையும் செய்யவில்லை என விமர்சித்தனர். திட்டங்களை முன்வைத்தால் விலகத் தயார் எனவும் சவால் விட்டனர். செந்தில் தொண்டமான் ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X