2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சம்பள விடயத்தில் ’அரசியல் பலத்தால் வெற்றி பெறுவோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைப் பேசுவதற்கு, தொழிற்சங்க பலம் இல்லாவிட்டாலும்கூட, அரசியல் பலத்தால் வெற்றிபெற முடியுமென்று நம்பிக்கைத் தெரிவித்த புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், முடியாவிட்டால் பதவி துறப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவியைப் பணயம் வைத்தே, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்காக, அரசியல் பேரம் பேசுவதாகவும், அவர் தெரிவித்தார்.

மலையக அபிவிருத்தி அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த ம​லையக மக்களுக்கு, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே மலையக அதிகாரசபை உருவாக்கப்பட்டதென்றும் எனினும், பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில், அமைச்சுப் பதவிகளைப் பணயம் வைத்தே, அரசியல் பேரம்பேசி வருவதாகவும் தெரிவித்ததோடு, இந்த அமைச்சுப் பதவிகள், நாளையே இல்லாமல் போகலாமென்றும் தெரிவித்தார்.

“நாம் இல்லாவிட்டாலும், எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டங்களை, எமக்குப் பின்னால் வருபவர்கள் சிறந்த முறையில் கொண்டுசெல்ல வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு” என்றும், அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலைகள் இரண்டுமே, தனியார்த் துறையின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலையில், மலையக மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக, அரசாங்கமானது, வரலாற்றில் முதற்றடவையாக, அதிகாரசபை ஒன்றை அமைக்க உதவியளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்திச் சபை, தனது பெயரிலோ தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ உருவாக்கப்படவில்லை என்பதை, அழுத்தமாகத் தெரிவிப்பதாகக் கூறிய அமைச்சர், ஒட்டுமொத்த மலையகச் சமூகத்தின் எதிர்காலத்தை, மலையகக் கல்வியாளர்களின் கைகளில் ஒப்படைக்கும் நிகழ்வாகவே இதனைத் தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .