2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுத்தைக்கு எதிராக ரொசிட்டாவில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - ரொசிட்டா தோட்டத்தில், திங்கட்கிழமை (11) மாலை, தோட்டத்தொழிலாளி ஒருவரை சிறுத்தையொன்று, தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரொசிட்டா தோட்ட மக்கள், நேற்று (12), வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில், தோட்ட ஆலயத்துக்கு முன்பாக கூடிய மக்கள், இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அண்மைக்காலமாக தோட்டங்கள் காடாகி வருவதால் சிறுத்தைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு சில மாதங்களில் இத்தோட்டத்தில் பலர் சிறுத்தைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகவும், தாக்கப்பட்டவர்களுக்கும் எந்தவித நட்டஈடும் வழங்க, தோட்ட நிர்வாகம் முன்வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர்.

15 கிலோ மீற்றருக்கு அப்பாலிருந்த சிறுத்தைகள்,   குடியிருப்புகளுக்கு  ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து வந்து தொழிலாளர்களை தாக்குவதாகவும், தோட்ட நிர்வாகமோ, வன ஜீவராசிகள் திணைக்களமோ இது குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை எனவும் தொடர்ந்தும் அச்சத்தில் இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  

இதேவேளை,  சிறுத்தைகளை தாக்கினால் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என வனவிலங்கு அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும், சிறுத்தைகளின் உயிருக்கு அளிக்கப்படும் மதிப்புகூட தோட்டத்தொழிலாளர்களின் உயிருக்கு அளிக்காதிருப்பது ஏன் என இவர்கள் கேள்வியெழுப்புகின்றனர். 

தோட்ட நிர்வாகம் சிறுத்தைகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை போடுமாறும் ஆனால், பட்டாசுகளை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொடுப்பதில்லை என்றும் தெரிவித்த இவர்கள் பட்டாசை போடும் பொழுது சிறுத்தைகள் தமது குடியிருப்புகளுக்கு சென்று தமது பிள்ளைகளை தாக்கினால் என்ன செய்வது என்று இவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

 

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,  

“அண்மைகாலமாக தோட்டத்தொழிலாளர்கள் சிறுத்தைகளின் தாக்குலுக்கு உட்பட்ட வருவதாகவும், தோட்ட நிர்வாகம் இதற்காக வேலை நேரத்தில் பாதிக்கப்பட்டாலும் கூட எவ்வித நட்டஈடு வழங்கப்படுவதில்லை என்றும் இது குறித்து தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் சிறுத்தைகள் தாக்குதலுக்குட்பட்டவர்கள் தோட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும்போது, அது சிறுத்தை அல்ல என தெரிவிப்பதாகவும் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புமில்லாத நிலையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என, இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .