2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுயத்தனிமை நடைமுறையை மீறி லிந்துலையில் அறுவர் விடுவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த சாரதிகள், உதவியாளர்களென மொத்தம் ஆறு பேர், 14 நாள்களுக்கு சுயத் தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை நுவரெலியா மாவட்டச் சுகாதார சேவைகள் பணிப்பாளர், நான்கு நாள்களிலேயே விடுவித்துள்ளார் என்று, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்படி மாவட்டங்களிலிருந்து, லிந்துலை சுகாதார வைத்தியப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு சாரதிகள், அவர்களின் உதவியாளர்களென 12 பேர், 31ஆம் திகதி, கனரக வாகனங்களில் வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுயத்தனிமைக்கு உட்படுத்துவதற்கு, அக்கரப்பத்தனை பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி குறித்த 12 பேரில் அறுவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்களென்பதால், அவர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று அப்பகுதியிலுள்ள சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ், சுயத்தனிமை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரை லிந்துலை பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலொன்றில், சுயத்தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

31ஆம் திகதி முதல், 14 நாள்;களுக்கு சுயத்தனிமையில் ஈடுபட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, அறுவருக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. 
எனினும், நான்கு நாள்;கள் மாத்திரமே கடந்த நிலையில், கண்காணிப்பில் இருந்த மேற்படி அறுவரும், சனிக்கிழமை (04) விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சுயத்தனிமை நடைமுறையை அவர்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் சுகாதார சேவைகள் பணிப்பாளரால், உறுதிப்படுத்தல் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது என்றும், நிறுவனத்துக்குரிய கனகர வாகனங்களும் (கண்டேனர்) விடுவிக்கப்பட்டுள்ளன என்றும், பிரதேச சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன்;, ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்குரிய அனுமதிப்பத்திரத்தை, லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொண்டு, அந்த அறுவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் , இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கச் செயலாகும் என்று, பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுத் தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வினவியபோது,
மேற்படி நடவடிக்கையை விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியில் அணுக வேண்டும் என்றும் ஒரு நபரை சுயத்தனிமைக்கு உட்படுத்தும் போது, அவர் யாருடன் தொடர்பை பேணியிருந்தாரோ, அந்த நபர்களை அடிப்படையாகக்கொண்டே கால எல்லை தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்பை பேணிய நபர்களுக்கு எவ்விதச் சிக்கலும் இல்லையெனில், 14 நாள்கள் என்ற கோட்பாடு பொருந்தாது என்றும், அதன் அடிப்படையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .