2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடர் வன்புணர்வுகளுக்குப் பயந்து கொழும்புக்கு ஓடினர் சிறுமிகள்

Editorial   / 2018 மே 06 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ, டி.சந்ரு, ஆர்.ரமேஸ்

ஆபாசப் படங்களைக் காண்பித்து, தொடர்ச்சியாகப் பலமுறை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட, கந்தப்பளைப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் மூவர், கொழும்புக்குத் தப்பிச்சென்றதோடு, அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

16, 14, 13 வயது​களைக் கொண்ட மேற்படி சிறுமிகள் மூவரும், கடந்த 28ஆம் திகதியன்று, பதுளையிலிருந்த கொழும்பு நோக்கிச் செல்லும் ரயிலில், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தை அடைந்த நிலையில், ரயில் நிலையத்தில் அநாதரவராக நின்றுகொண்டிருந்ததை அவதானித்துள்ள ரயில் நிலைய அதிகாரிகள், அவர்கள் மூவரையும், புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியரின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் சிறுமிகளை ஒப்படைக்க முயன்றபோது, பெற்றோருடன் செல்ல, அச்சிறுமிகள் விரும்பாததால், புதுக்கடை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, அதற்கு அஞ்சி, அவர்கள் கொழும்புக்குத் தப்பியோடியுள்ளனர் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொரு சிறுமியுமே, இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியரை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும், சிறுமிகளின் நெருங்கிய உறவினர்கள் உட்பட நால்வரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11ஆம் திகதிவரை, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கந்தப்பளை - பாக்குத் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகள் வழங்கிய தவகலுக்கு அமைவாகவே, மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகளுக்குக் காண்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருதொகை ஆபாச இருவட்டுகளையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .