2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்

நுவரெலியா மாவட்டம், பசுமலை, ஊட்டுவெள்ளி தோட்டப் பிரிவான, பெங்கட்டன் சின்ன தோட்டத்தில், 300க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் இன்று (17), காலை 9 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வீதிக்கு இறங்கி  கூடாரம்  அமைத்து போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

பெங்கட்டன் தோட்டத்தில், 2015ஆம் ஆண்டு, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக, கிராம மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டு, கடந்த வருடம் செப்டம்பர் மாதம், 9ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டதையடுத்து, பயனாளிகளுக்கு, முறையாக வீட்டு உறுதி பத்திரங்களுடன் கையளிக்கும் நிகழ்வு, தலவாக்கலை நகரசபை மைதானத்தில் அன்றைய தினமே நடைபெற்றது.

இந்நிலையில், பெங்கட்டன் தோட்டத்தை முழுமையான கிராமமாக மாற்றியமைக்கும் நோக்குடனே இந்த தனிவீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், குறித்த தோட்டத்தில், மேலும் 84 குடும்பங்களுக்கு, தனிவீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த வீடுகளை அமைக்க வழங்கப்பட்ட 71 வீடுகளில் தங்கியிருந்த குடும்பத்தார்கள் நீண்டகாலமாக வசித்து வந்த லயன் வீடுகளை உடைக்க வேண்டிய நிலையுள்ளது. காரணம் மேலதிக வீடுகளை அமைக்க அத்தோட்டத்தில் மேலும் தேயிலை காணிகளை பெற்றுகொள்ள தயக்கம் காட்டப்பட்டுள்ளமையே என தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால், புதிய வீடுகளைப் பெற்று சென்ற குடும்பங்கள் வசித்த லயன் அறைகளை உடைத்து, அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள போதிலும், புதிய வீடுகளை உறுதிப் பத்திரங்களுடன் பெற்றுக்கொண்டுள்ள அத்தோட்டத்தின், இலக்கம் ஒன்று லயத்தில் வசித்துவந்த எட்டு குடும்பங்கள், லயத்து வீட்டிலிருந்து அகன்று செல்ல, தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், லயத்தினை உடைத்து, அவ்விடத்தில் புதிய தனி வீடுகளை அமைக்க தடை ஏற்பட்டுள்ளதுடன், இவர்களை இந்த வீடுகளில் இருந்து அகற்றி அவர்களுக்கு வழங்கியுள்ள புதிய வீடுகளுக்கு செல்ல அழுத்தம் கொடுத்துள்ள தொழிலாளர்கள், இவர்களுக்கு எதிராகவும், மேலும் இந்த தோட்டத்தில் கட்டப்படவேண்டிய 84 வீடுகளை கட்ட வழியுருத்தியும், பணிபகிஸ்கரிப்புடன்  போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தோட்ட நிர்வாகம் இந்த விடயத்தில் தலையிட்டு, உரிய தீர்வினை வழங்க வேண்டும் என, காலை 11 மணியளவில் தமது ஆர்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ள தொழிலாளர்கள், நிர்வாகம் உடனடி தீர்வை எட்டாவிடின், தொடர்ந்தும் ஆர்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .