2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை விவசாயச் செய்கைக்காகப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை, தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து, விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கொழும்பு  உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக முறியடித்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில்,  நேற்று(6) மாலை நடைபெற்றது.

அமைச்சர் ஆறுமுகன்  தொண்டமான் தலைமையில், சுமார் இரு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரச அதிபர், தோட்டப் பிரிவுகளுக்கு பொறுப்பான முகமையாளர்கள், மாவட்டத்துக்குப் பொறுப்பான  பொலிஸார், பிரதேச சபை தவிசாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தமது கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடலில், பெருந்தோட்டப் பகுதிகளுக்கான நிவாரணத் திட்டங்கள்,  5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு, கொழும்பு  உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊருக்கு வருபவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகள், மருத்துவம் ஆகியன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டன.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,

கொரோனா வைரஸின் தாக்கம், கொடூரமான நிலைக்கு சென்றுக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு, முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு வழங்கி, விவசாயத்தை ஊக்குவிக்குமாறு முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், இக்கலந்துரையாடலில் விவசாயத்துறை அதிகாரிகளும்   பங்கேற்றனர் என்பதால், விதைகள் விநியோகிக்கப்படும் வழிமுறைகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர் என்றும் தெரிவித்தார்.

தோட்டப்பகுதிகளில் எத்தனை ஏக்கர் தரிசு நிலம் உள்ளது, ஒருவருக்கு எவ்வளவு பகிர்ந்தளிக்கலாம் போன்ற விவரங்களை வழங்குவதற்கு, 10 நாள்கள் அவகாசத்தை முகாமையாளர்கள் கோரினர் என்றும் அந்த விவரங்கள் முன்வைக்கப்பட்டதும் விவசாயத்தை ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

ஐந்தாயிரம் ஆயிரம் ரூபாய் யார், யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிகளாக இருந்து தற்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும். கிராம சேவகர்கள் ஊடாக பெயர், விவரம் திரட்டப்பட்டுள்ளன.

நாளையும், நாளை மறுதினமும் தோட்டங்களுக்கே சென்று அந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்.

இதன்போது கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், தோட்ட நிர்வாகங்கள், விவசாயத்துக்கான காணிகளை வழங்கும்,  விவசாய திணைக்களம், விதைகளை வழங்கும். எனவே, தோட்டத்தில் வேலை இல்லாதவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்தால் விளைச்சலை இரட்டிப்பாக்கலாம் என்றும் நாட்டுக்கு தேவையான மரக்கறி விநியோகத்தை வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X