2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மினிசூறாவளியால் எம்பிலிப்பிட்டியவில் பாரிய பாதிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

 

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் (23) மாலை பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக, பிரதேசங்கள் பலவற்றுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதென, பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதலங்கல, குட்டிகல, ஹாகல, ஜுலங்கெட்டில ஆகிய  பிரதேசங்களிலேயே பாரியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

மேற்படி பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்ததெனவும், அதன் பின்னர் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துள்ளதுடன், மினிசூறாவளியும் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்கள் நீடித்த மினிசூறாவளியே, பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதென, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

20 வீடுகள் பாதிப்பு

மேற்படி பகுதிகளில் வீசிய மினிசூறாவளியால் 20 வீடுகள் பாதிப்படைந்துள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. சில வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளனவெனவும், பாதிக்கப்பட்ட மக்கள், நண்பர்களினதும் உறவினர்களினதும் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊருபெரத்த, 15, 16, 17ஆம் எல, ஹெஹெரகொடெல்ல ஆகிய பிரதேசங்களே, அதிகளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

200 ஏக்கர் வாழைத்தோப்பு சேதம்

மினிசூறாவளியால், 200 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட வாழைத்தோப்புச் சேதமடைந்துள்ளதெனத் தெரிவிக்கும் விவசாயிகள், இதனால் அறுவடைக்குத் தயாராகிவிருந்த வாழைக்குலைகள் அனைத்தும் நாசமடைந்துள்ளன என்றும் குறிப்பிட்டனர்.

இதனால், தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் விவசாயிகள் அங்கலாய்த்தனர்.

இதேவேளை, தென்னை, இறப்பர், பலா, தேக்கு, புளி ஆகியவற்றோடு, மிகப் பழமையான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன என்றும் குறிப்பிடப்படுகிறது.

மின்னிணைப்பில் பாதிப்பு

பாரிய மரங்கள் முறிந்து மின்கம்பங்களிலும் மின்கம்பிகளிலும் விழுந்ததால், மேற்படி பிரதேசங்களுக்கான மின்னிணைப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் அசமந்தம்

மேற்படி பிரதேசங்களில் நேற்று முன்தினம் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள போதிலும் நேற்றுப் பகல் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஸ்தலத்துக்கு வந்து நிலைமைகளைக் கண்டறியவில்லை என்று, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .