2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘ரூ.140 இல்லையேல் பதிலடி பயங்கரமாக இருக்கும்’

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே, பிரதமரின் காலைவாரிவிட்டு - கழுத்தறுப்புச் செய்து கட்சி தாவியபோதும், ஜனாநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணி கைகொடுத்ததாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பொறுமைக்கும் எல்லையுண்டெனவும், அதை அரசாங்கம் பரிசோதிக்குமேயானால்,  தெற்கு அரசியலையே புரட்டிப்போடுமளவுக்கு தமது பதிலடி படுபயங்கரமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.   

திகன - அம்பக்கோட்ட குன்றுக்குமரன் ஆலயத்தில் அறநெறி பாடசாலைக்கான கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார்.  

இதன்போது ​மேலும் தெரிவித்துள்ள அவர், ஒரு சமூகத்தையே 22 கம்பனிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அரசாங்கமோ கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகச் சாடியதுடன் கம்பனிகளும் தனி இராச்சியமொன்றை நிர்வகிப்பதுபோல் தாம் நினைத்த தாளத்துக்கு ஆட்டம்போடுகின்றன என்றும் விமர்சித்தார்.   

மக்கள் பிரதிநிதியொருவர், பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால்கூட, கம்பனிகளின் சார்பில் எவரும் வருவதில்லை என்றும் உரிய வகையில் கணக்குகளைக் காட்டப்படுவதில்லை எனவும் கூறினார். 

“எனவே, இலங்கைக்கு கிடைத்துவிட்டதாக கூறப்படும் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாத மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே எமது மக்கள் வாழ்கின்றனர்” என்றும் “2015 ஜனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னராவது விடிவு கிட்டும் என நினைத்துதான் நாமும் மாற்றத்துக்காக கடுமையாக உழைத்தோம். ஆனால், இன்று என்ன நடக்கின்றது? நடப்பவற்றை பார்க்கையில் மனம் சினம்கொண்டெழுகின்றது” எனவும் தெரிவித்தார்.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில், அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதாகவும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது, அமைச்சர்களும் பிரசன்னமாகியிருந்தனர் என்றும் தெரிவித்த அவர், எனவே, இதுவிடயத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பிரதமரோ, அரசாங்கமோ நழுவிவிட முடியாது என்றும் சாடினார்.  

குறைந்தபட்சம் தமது மக்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 140 ரூபாயை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒருநாள் வேலைக்குச் சென்றால், 140 ரூபாய் உறுதி என்ற உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.   

இத்தொகையை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க தவறுமானால், பெருந்தோட்டக் கம்பனிகளின் தாளத்திற்கேற்ப ஆடுமானால், எமது பதிலடி படுபயங்கரமாக அமையும். அது தெற்கு அரசியலில் பல தீடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X