2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’வீணாக எம்மை விமர்சிப்பதைத் தவிர்க்கவும்’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், வீணாக விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

மலையக சமூகம் தொடர்பில், தனியார் ஊடகமொன்றுக்கு பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், அனுஷா சந்திரசேகரன் தனது பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“குப்பி இலாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் கஷ்டத்துக்காகக் குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு வாழ்க்கையைப் படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண். எம் சமூகத்தை விமர்சிக்க எத்தனிப்பவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். யாரோ ஒருவரின் வாய் வார்த்தையை பெரிதாக்கி, அதில் அரசியல் செய்யும் நோக்கத்தோடு இந்தப் பதிவை இடவில்லை.

“எம் மலையகத்தில் பிறந்த பெண்ணாக ஒரு சட்டத்தரணியாக ஏனைய அனைத்து சமூகத்தையும் மதிக்கும் பிரஜையாக ஒரு பணிவான வேண்டுகோளாக இந்தப் பதிவை பகிர்கிறேன். வேண்டுகோளை ஏற்காவிட்டால் எச்சரிக்கை.

“நாங்கள் மலையக சமூகமாக கல்வி, விளையாட்டு, கலாசார துறை மட்டுமன்றி, இதர பல துறைகளிலும் பிற சமூகத்தினருக்கு நிகராகவே வளர்ச்சியடைந்துள்ளோம். அதேபோன்று ஒரு அறையில் குப்பி இலாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் குடும்ப கஷ்டத்துக்காக குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு வாழ்க்கையைப் படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண்.

“வளர்ச்சியை பற்றி தெரியாமல் அறியாமல் விமர்சிக்க வேண்டாம்.  இனியாயினும் பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் எம் சமூகம் சார்ந்த வார்த்தைப் பிரயோகங்களைக் கவனமாகக் கையாளவும்.  ஒரு பேராசிரியர் என்ற ரீதியில் தங்களின் மீது கல்வியியலாளராக நன்மதிப்புள்ளது. அதற்காக நீங்கள் பிற சமூகம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்கள் யாவும் சரி என்றாகிவிடாது.

“உயர்தரம் வரைக்கும் மட்டுமே படித்து பட்டதாரியில்லாத போதும் கல்வியின் சமூக வளர்ச்சிக்காக பாடுபட்ட எம் வீர தலைவர் சந்திரசேகரனின் புதல்வியாகவும் அதே மலையக மண்ணின் பட்டதாரியாகவும் சட்டத்தரணியாகவும் கூறுகிறேன், எங்கள் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .