2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சட்டவிரோத கட்டுமானங்களை உடைத்தெறியவும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -  அளுத் மாவத்தை வீதி, 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள், கழிவு நீர் கால்வாயை சட்டவிரோதமாக அடைத்துள்ளமையால் அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவித்தனர். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, விவரங்களைக் கேட்டு தெரிந்துக்கொண்டார்.

இதையடுத்து, கொழும்பு மாநகர சபை முதன்மை பொறியியலாளர், மாநகரசபை வடகொழும்பு பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பிரதான பொறுப்பதிகாரி, முகத்துவார பொலிஸ் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு உடன் தருவித்த அமைச்சர் மனோ கணேசன், சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

“நாடெங்கும் டெங்கு தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் பல நாட்களாக அழுக்கு நீரில் குழந்தைகள் உட்பட கொழும்பு நகர வாழ் மக்கள், இந்த தோட்டத்தில் வாழ்ந்துள்ளனர். இது பெரும் கொடுமை. தமிழ் பேசும் குறைந்த வருமான மற்றும் மத்திய வருமானப் பிரிவு மக்கள் வாழும் பகுதிகளில், தமது செல்வாக்குகளை பயன்படுத்தி, சட்டவிரோத கட்டுமானங்களை கட்டி, அழுக்கு மற்றும் மழைநீர் கான்களை அடைத்து,  சிலர் கோலோச்சுகின்றனர். இதுவே இங்கே நடந்துள்ளது. இப்படி நம் மக்களை மிரட்டி பணியவைக்க எவருக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன்.

“இதுபோல் கொழும்பில் அப்பாவி ஏழை மக்கள் வாழ்விடங்களை அண்மித்த காணிகளை, தம் செல்வாக்குகளை பயன்படுத்தி தனவந்தர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களையும், சட்டவிரோதமாக கழிவுநீர், மழைநீர், சாக்கடை கான்கள் அடைக்கப்பட்டுள்ள இடங்களையும், அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். பொலிஸ் நிலையங்கள் தோறும் சுற்றுச்சூழல் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றுக்கு பொறுப்பாக பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X