2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சைட்டம் மக்கள் மயமாக்கப்படமாட்டாது’

Niroshini   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சைட்டம் தனியார் கல்லூரியை, ஒருபோதும் மக்கள் மயமாக்க நடவடிக்கை எடுக்க மாட்டோம்” என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமும் சைட்டம் விவகாரம் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த மாணவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தொடர்பாக அமைச்சர் ராஜிதவிடம் வினவியபோது கூறியதாவது, 

“ரத்துபஸ்வலயில் போராட்டம் நடத்தியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களை கொலை செய்த ஒருவர் தான் தற்போது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.  

“புரட்சித் தலைவரான லெனின் கூட இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தீவிரவாதியென்றே வர்ணித்துள்ளார். இப்படியிருக்கும்போது, தீவரவாதிகள் போல் செயற்பட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நடந்து கொண்ட விதத்தை எவ்வாறு தவறு என்று கூறுவது? 

“மாணவர்களை அடித்தது குற்றம் என்றால், அவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து பல மில்லியன் ரூபாய் சொத்துகளை சேதமாக்கியது குற்றமாக தெரியவில்லையா? 25 ஆயிரத்துக்கும் மேல் அரச சொத்தை எவரேனும் சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டால், அவர் பிணையில் கூட செல்லமுடியாது. அந்தவகையில், தற்போது நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் இவர்கள் பிணையில் வெளியே வருவது இலகுவான காரியம் அல்ல” என்றார். 

மேலும், “சைட்டம் விவகாரத்தில் நாம் தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டு வருகிறோம். எச்சந்தர்ப்பத்திலும் சைட்டம் தனியார் கல்லூரியை, ஒருபோதும் மக்கள் மயமாக்கமாட்டோம்” எனவும் தெரிவித்தார். 

அமைச்சர் தயாசிறி ஜயசேகர 

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியதாவது,  

“சைட்டம் குறித்து நாம் தற்போது தீர்மானித்துவிட்டோம். இதுகுறித்து நேற்று (நேற்று முன்தினம்) அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். அந்தவகையில், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுக்கு கீழ் இயக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பெறப்பட்ட கடனை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என்பதால் அத்தொகையை இனி அரசே செலுத்தும் என்றும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வைத்தியசாலை முழுவதுமாக அரசுடமையாக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

“இதுதொடர்பில் அரசாங்கம் எடுக்கும் முடிவு, எந்தவொரு தரப்பையும் முழுமையாக திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அமையாது என்பது எமக்குத் தெரியும். இருப்பினும், அனைத்து தரப்பினரையும் சிந்தித்தே இந்த விடயம் குறித்து முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளது. 

“இதேவேளை, சைட்டம் விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் ஆகியோர் கலந்துரையாடி வருகின்றனர். விரைவில் அமைச்சரவையில் விசேட பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளனர். 

அதன் பின்னரே, இவ்விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X