2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டத்தில் நிவாரணங்கள் முறைமைப்படுத்தப்பட வேண்டும்: வி.ஜனகன்

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையின்மை காரணமாக, உணவுக்கும் விநியோகத்துக்கும் அதிகூடிய செலவினை வருமானம் இன்றித் தவிக்கும் மக்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஜனநாயக மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன், இந்த வார இறுதியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட உள்ள பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டத்தில் ஒரு தீர்க்கமான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன:

“இந்த வார இறுதியில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட உள்ள பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டத்தில் (Exit Strategy) நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுவது மாத்திரம் அல்லாமல் அவை முழுமையாக மக்களுக்கு உரிய நேரத்திலேயே கிடைக்கும் வகையில் ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்.

“இந்த பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டத்தில் இலங்கை அதி ஆபத்து வலயம் (High Risk zone), மிதமான ஆபத்து வலயம் (Moderate Risk zone), குறைந்தளவு ஆபத்து வலயம் (Law risk zone) என்ற ரீதியில் மூன்று வகையில் பிரிக்கப்படலாம். இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் high risk zone இல் உள்வாங்கப்படலாம். அதேபோல் கண்டி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் moderate risk zone இல் அமையலாம். இந்தப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்துகளுக்குத் தடைகள் ஏற்படுத்தப்படலாம். இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு அசௌகரிய நிலைமையே தொடரும் என்பது தௌ்ளத்தௌிவானது.

“இதனை அரசாங்கம் சரியான முறையில் திட்டமிட வேண்டும். இந்த முழுமையான முடக்க (lookdown) காலத்தில் உணவு வழங்கல் மற்றும் விநியோகித்தலில் பல்வேறு குறைபாடுகளும் பணவிரயங்களும் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக்காலப்பகுதியில் 38 சதவீத இடைத்தரகர்களின் எண்ணிக்கை உணவு வழங்கல் தொடரில் அதிகரித்துள்ளது என்றால், இது ஒரு மிகப்பெரிய இலாப மார்க்கமாக இருப்பதே காரணம். இன்று அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையின்மை காரணமாக உணவுக்கும் விநியோகத்துக்கும் அதிகூடிய செலவினை வருமானம் இன்றித் தவிக்கும் மக்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளது.

“இதேபோல் பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டக் காலப்பகுதியில் போக்குவரத்துக்கும் இதேநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் இந்த exit strategyஇல் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள் வழங்கல் மற்றும் விநியோகத்துக்கும் போக்குவரத்துக்கும் உரிய திட்டங்களை அறிவிப்பது மட்டும் அல்லாமல் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இதனைப் பாதுகாப்புத் துறையினூடாக கூட முறைப்படுத்துவது சிறந்ததே.

“மேலும் இந்த high risk மற்றும் moderate risk பிரதேசங்களில் வாழும் சுமார் ஒன்பது மில்லியன் மக்களில் வருமானமற்றவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். இன்று இந்த 5,000 ரூபாய் நிவாரணம் கூட முறைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இவ்வாறு இல்லாம், இது அவர்களுக்கு உரிய நேரத்தில் உடனடியாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும்” எனவும் கலாநிதி ஜனகன், மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .