2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அங்கிகாரம் பெற்ற அரசியல் தீர்வை நோக்கி பயணிப்போம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமது உரிமைகைளை அனுபவிக்கக் கூடியவகையில், தமிழ்த் தேசத்தின் அங்கிகாரம் பெற்ற ஓர் அரசியல் தீர்வை நோக்கி பயணிப்போமென்று, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வவுனியா - கனகராயன்குளம் பகுதிக்கு, நேற்று (11) விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாயகநிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றனவெனவும் வன்னி மாவட்டத்தையும் அந்த நிலைக்குக் கொண்டு செல்கின்றார்களெனவும் கூறினார்.

“எனவே, இந்த தேர்தலுக்குப் பின்னர் வரக்கூடிய நிலைமை தொடர்பாக நாம் ஆராயவேண்டும். இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது. அது ஓர் ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது. அதனை ஆதரிக்கபோவதாக கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருக்கின்றது” எனவும், அவர் தெரிவித்தார்.

“ஒற்றுமை என்ற கோசத்தை விக்கினேஸ்வரன் மீண்டும் வலியுறுத்த தொடங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்றுக்கொள்ளதயாராக இருப்பதாக உலகுக்கு காட்ட முனையும் செய்தியை நாம் முறியடிக்கவேண்டும்.

“அந்தப் புதிய அரசமைப்பானது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த எதிர்ப்பை நிலைநாட்டியே ஆக வேண்டும். எனவே, ஒற்றையாட்சி அரசமைப்பு என்ற சதியை முறியடிப்பதற்கு மக்களை அணிதிரட்டி கட்டமைக்கும் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

“யாழில் மாத்திரமின்றி ஏனையமாவட்ங்களிலும் அதனை முன்னெடுப்பதற்காக எமது கட்சியை சேர்ந்த கஜேந்திரனுக்கு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கியிருந்தோம். ஒற்றையாட்சியை முறியடிப்பதற்கு யாழைத் தவிர ஏனைய மாவட்டங்களிலும் எமது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இந்த இனத்தின் உரிமைகளைத் தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பதுடன், எமது உரிமைகைளை அனுபவிக்கக் கூடியவகையிலே தமிழ்த் தேசத்தின் அங்கிகாரம் பெற்ற ஓர் அரசியல் தீர்வை நோக்கி நாம் பயணிப்போம். உங்களுடைய உழைப்பும் முயற்சியும் வீண்போகாது” எனவும், கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் தொடர்பாகவும்  இன அழிப்புக்கு நீதி கோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் தங்களை திரும்பியே பார்க்கவேண்டிய தேவை இல்லை. எந்த தரப்பின் ஆதரவும் அவர்களுக்குத் தேவையில்லை.

அவர்கள் போர்க்குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். எனவே பொறுப்புக்கூறல் என்றவிடயத்தை இறுக்கமாக முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே அவர்கள் எங்களை திரும்பிப் பார்க்கும் நிலைமை உருவாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .