2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடைமழையால் திண்டாடும் வடக்கு

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், செ.கீதாஞ்சன், சுப்ரமணியம் பாஸ்கரன், என்.ராஜ், மு.தமிழ்ச்செல்வன்

வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், பொதுமக்களின் இயல்புநிலை வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாரிய அளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், முல்லைத்தீவ மாவட்டத்தில், நேற்று வரையான கடந்த 24 மணிநேரத்தில், 150 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

இதனால், தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால், வான்கதவுகள் மூன்றும் திறந்துவிடப்பட்டுள்ளன என்று நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்வதாகவும் வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ், 11 குளங்கள் வான் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடல் கொந்தளிப்பு காரணமாக, வடக்கில் இன்று இரண்டாவது நாளாகவும் மீன் பிடியாளர்கள் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருந்தனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பாரிய அளவில் பாதிப்புக்கள் எவையும் இதுவரை பதிவாகாத நிலையில், தாழ் நிலப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் 149.3  மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்

யாழ். நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் இன்றில் இருந்து தொடர்ந்து 24 மணித்தியாளத்துக்கு, 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மக்கள்  அனைவரும்  அவதானத்துடன் செயற்படுமாறும் அவர்  கோரிக்கை விடுத்தார்.

யாழ். மாவட்டத்தில், மழை காரணமாக, 74 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

8 வீடுகள் பகுதியளவில் சேததடைந்துள்ளது என்றும் மேலதிக பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேரிக்கப்பட்டு, அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பலநீர்பசன குளங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக, நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளத்தின் 14 வான் கதவுகள்  தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியான நீர் வருகை காணப்படுவதால், திறக்கப்பட்ட வான் கதவுகளின் அளவுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை அண்மித்த, நீர் வடிந்தோடும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதுடன், பாதுகாப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும் நீர்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .