2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

​- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

சிறையில் கொல்லப்பட்ட அரசியல் கைதி டில்ருக்ஸனின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ். பஸ் நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (08) மாலை  இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன், ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் குறித்த ஐந்து அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யுத்தம் முடிவுற்று எட்டு வருடங்கள் கழிந்தும் 130 பேர் வரையிலான அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலருக்கு வழக்குத் தொடுக்கப்படவேயில்லை.

வழக்குத் தொடுக்கப்பட்டோரில் பலருக்கு 8-10 வருடங்கள் கழிந்தும் வழக்கு முடிவின்றி துன்புறுகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதனால் பிணை மறுக்கப்படுகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது தொடுக்கப்பட்டிருக்கின்ற வழக்குகளைத் துரிதப்படுத்துமாறும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அன்றைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் அவர்கள் மீது கொடூர கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டு தலை, கை, கால்களை உடைத்தனர். தாக்குண்டவர்களில் நிமலரூபன், டில்ருக்ஸன் இருவரும் கொல்லப்பட்டனர்.

வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் நடத்திய போராட்டத்தை நிறுத்திட ஆயுதம் தரித்த இராணுவம் அனுப்பப்பட்டது.

கைவிலங்கிடப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தோர் எனச் சந்தேகிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலில் 15 பேரளவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.

இதில், நிமலஷரூபன் அடுத்த நாளே மரணித்தார். டில்ருக்ஸன் உடல் அசைவற்ற நிலையிலும் வைத்தியசாலையில் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் மரணத்தைத் தழுவினார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கைதிகளில் நூறு வரையானோர் சிறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களுக்குள்ளாகி வாழ்நாள் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர்.

19971 மற்றும் 1989,1998 ஆம் ஆண்டுகளில் தெற்கின் இளைஞர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கினர். கைது செய்யப்பட்டோரின் வழக்குகள் மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டன.

கடந்த நாட்களில் நீதியமைச்சர் ‘தற்போது சிறைகளில் உள்ளோர் பயங்கரமானவர்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாது’ என நீதிமன்றங்களில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தமது தீர்ப்பினை வழங்கியிருப்பது நாட்டின் சட்டத்தையும் நீதிமன்றையும் அவமதிக்கும் செயலாகும்.

இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. நல்லாட்சி அரசில் நம்பிக்கை வைத்து வாக்களித்த நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எம் அரசியல் தலைவர்களும் ஏமாற்றுகின்றார்கள் என்பது எம்மை விரக்தி நிலைக்குள் தள்ளியுள்ளது.

வடக்கின் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை போன்றன தீர்க்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் பெற்றோர் தம் உறவுகளின் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகள் இழந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆயத்தமில்லாதோர்கள் நாம் விரும்பும் அரசியல் தீர்வை முன்வைக்கப் போவதில்லை.

நல்லாட்சி முகமூடி அணிந்தோர் இனவாத அரசியலுக்குள் அடைக்கலம் புகுந்து தமது எதிர்கால அரசியலை திட்டமிடுகின்றனர். இவர்களே நல்லிணக்கம் தொடர்பாகவும் கதைக்கின்றனர். இது தமிழர்கள் விடயத்தில் இவர்களின் இரட்டை நிலைப்பாடு எனலாம்.

டில்ருக்ஸன் நினைவேந்தல் நாளில் அரசிடம் கோருவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, இராணுவ முகாம்களை அகற்றுதல், காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு என்பவற்றின் ஆரம்ப கட்டமாகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் ஆட்சியாளர் அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .