2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இடைக்கால அறிக்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளது’

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தேச அரசமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நோயைப் புரிந்து கொள்ளாது மருந்துகளைப் பற்றிய சர்ச்சையில் நாம் ஈடுபட்டுள்ளோம். நோயைப் புரிந்து கொள்ள நோயின் சரித்திரம் மிக அவசியம். எவ்வாறான பின்புலம் இன்றைய நோயை ஏற்படுத்தியது என்று அறிந்தால் தான் உரிய சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். இடைக்கால அறிக்கை, நோயை அறிந்ததாகவோ, தீர்க்கப் போதுமானதாகவோ தென்படவில்லை. நோயை அறியாத சிகிச்சை தோல்வியில் முடியும்.

எதனைப் புறக்கணித்து நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது. சிங்களத் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் எடுத்துக் கொண்டு, தாம் செய்ததே சரியென்ற அடிப்படையில் இதுவரை காலமும் நடந்து கொண்டதே எமது அரசியல் நோய்க்கு மூல காரணம். குறித்த தலைவர்களின் இதுவரையிலான செயற்பாடும் நோக்கும் கண்டிக்கப்பட்டு அதற்கான மாற்றத்தை நாம் முன் வைக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நோய்க்கு நாம் பரிகாரம் தேடலாம்.

ஒற்றையாட்சியை நிராகரித்து, தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் ஒற்றையாட்சி முறைமையை தக்க வைக்கும் பொருட்டு வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமைக் அருவருப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டினுடைய ஆட்சிக் கட்டமைப்பை குறிக்கப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒரு பொருத்தமான வார்த்தையைப் பயன்படுத்தாது “ஏகிய ரட” என்கின்ற சிங்கள சொற் பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இது அறிக்கை ஆக்கியோரின் கபடத்தனத்தை வெளிக்காட்டுகின்றது.  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டு, இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் கோரிக்கை இவ் இடைக்கால அறிக்கையில் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருத முடியும்.

அறிக்கையின் ஆங்கிலப் பிரதியைப் பார்த்தீர்களானால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஏறத்தாழ 70 ஆண்டுகளாக தமது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் அடக்கியிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர, திடமாகத் தமக்கு வேண்டியவற்றைக் கூறத் தவறியுள்ளது. வட மாகாண சபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.

மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிர என்னென்ன அதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பன பரிந்துரை செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பான பயணத்தை பின்னோக்கி நகர்த்தியுள்ளதாகவே கருதலாம். தொடர்ந்து போராட வேண்டியநிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு நல்கியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .