2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராணுவத்தினர் மீது தாக்குதல்; எட்டு இளைஞர்களுக்கு பிணை

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்.

யாழ். நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

யாழ். நாகர் கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு கூடியவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி அதிகாலை இராணுவத்தினர் நாகர் கோவில் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். 

அதன் போது நான்கு இளைஞர்களை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் தொடர்ந்து வந்த நாட்களிலும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து மேலும் நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட எட்டு இளைஞர்களும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று (29) வரை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இளைஞர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

அதன் போது எட்டு இளைஞர்கள் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார். 

எட்டு இளைஞர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இரு தரப்பின் நீண்ட வாதத்தின் பின்னர், எட்டு இளைஞர்களையும் தலா  5 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .