2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘உடனடித் தீர்வை அரசாங்கம் எட்ட வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவர்களது பணிப்பகிஷ்கரிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றமையானது அடிக்கடி தொடர்ந்து இடம்பெறுகின்ற ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், மருத்துவ சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைள் தொடர்பில், இழுத்தடிக்கும் போக்குடன் அரசாங்கம் செயற்படாது, அப்பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் மருத்துவர்களது பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கைகள் ஏனைய மாவட்டங்களில் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மருத்துவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றேல், மேற்படி பணிப்பகிஷ்கரிப்பானது ஒன்றிணைந்த பணிப் பகிஷ்கரிப்பாக தொடரும் அபாயம் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஆளணியினருக்கான பற்றாக்குறைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்ற நிலையில், நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும்போது, இத்தகைய பணிப்பகிஷ்கரிப்புகள் மேலும் அவர்களை கடுமையான பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதே நிலையை நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலத்தில் நாட்டில் எரிபொருள்துறை சார்ந்த பணியாளர்களது பணிப்பகிஷ்கரிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கத்தால் முடிந்திருந்தது. ஆனால், தொடரும் மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகளை முடிவுக்குக் கொண்டு அரசாங்கத்தால் இதுவரையில் இயலாதிருப்பது கேள்விக்குரிய விடயமாகியுள்ளது.

மருத்துவர்களது பிரச்சினைகளுள் பிரதான பிரச்சினையாக காணப்படுகின்ற மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டங்களில மருத்துவத்துறை மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களது கற்கைச் செயற்பாடுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் எமது நாட்டில் மருத்துவர்களுக்கு பாரிய பற்றாக்குறைகள் நிலவும் நிலையில், நாளைய மருத்துவர்களாக மாற வேண்டிய இந்த மாணவர்களது கற்கை செயற்பாடுகளும் பாதிக்கப்படுமானால், எமது நாட்டின் எதிர்கால மருத்துவத்துறையானது பாரிய சவாலுக்கு உட்படுத்தப்படுவது நிச்சயமாகும்.

எனவே, தற்போதைய இந்த நெருக்கடியான நிலையை அவதானத்தில் கொண்டு, உடனடி, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அரசாங்கம் எட்ட வேண்டுமெனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .