2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’உரிமைகளை வென்றெடுக்க புதிய பாதை தேவை’

Editorial   / 2019 மே 10 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

தமிழ் - முஸ்லிம் உறவுகளின் விரிசல் அபாயகரமானது. எனவே, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய பாதையை உருவாக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை குண்டுத் தாக்குதலின் பின்னர், வடமாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. இராணுவம் குவிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம், இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 

அந்தச் செயற்பாடுகளை மாற்றி, வெளிப்படையாகவே, இராணுவம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது, தமிழர்கள் இன்னுமொரு யுத்த சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை மிகப் பாரியளவில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என்பது ஒரு புறமாக இருந்தாலும், குறிப்பாக, தமிழர்கள் மீது தான், இராணுவத்தினரும், அரச படைகளின் பார்வைகளும் காணப்படுகின்றன. தமிழர்களை பயந்த சூழலில் வைத்துக்கொள்வதற்கான எண்ணப்பாட்டை தெளிவாக காட்டுகின்றது. 

வன்முறைகளை அடக்குவதற்காக இராணுவத்தினர் மகிழ்ச்சிகரமாக செயற்படுவதை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஓர் அபாயகரமான சூழல். குறிப்பாக, உயிரிழந்தவர்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், தென்னிலங்கையிலும் சரி, கிழக்கு மாகாணத்திலும் சரி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என்பது வெளிப்படையானது. ஆடிப்படை தீவிரவாத எண்ணங்களைக் கொண்டவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

ஆனால், அவர்கள் அவ்வாறான தாக்குதலை மேற்கொண்ட போதிலும், இறந்தவர்கள் தமிழர்களாக இருக்கின்றார்கள். 

இதுவும் இலங்கையில் இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பாக எம்மால் பார்க்க முடிகின்றது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற உலக நாடுகள் பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்ற இந்த வேளையில், இலங்கைக்கு ஆதரவாக கருத்தைச் சொல்லும் கால சூழ்நிலைக்குள் இலங்கை தள்ளப்பட்டிருக்கின்றது.

70 வருடமாக உரிமைக்காக போராடிய தமிழினம், செத்து மடிந்து, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்து 10 வருடங்கள் ஜனநாயக வழியில் தமது உரிமைக்காக போராடி வரும் போதும், இன்று வரை எந்தவிதமான அரசியல் தீர்விற்கான முன்நகர்வுகளும் எடுத்து வைக்கப்படவில்லை. அந்த நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

இவற்றை எந்தக் கட்டத்தில் இருந்து தமிழர்கள் ஆரம்பிப்பது. ஆப்படியானால், தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் மேற்கொண்டதாக, பெரிய பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில், தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தான் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். 

இவ்வாறான கதைகளால், தமிழ் முஸ்லீம் உறவுகளுக்கிடையில் பாரிய விரிசல்கள் உருவாகக்கூடும். தமிழ், முஸ்லீம்களுக்கு இடையிலான பாதிப்பு என்பது ஒரு அபாயகரமானது. வடக்கும், கிழக்கும் இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்ற தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை கூட இன்று ஆட்டம் கண்டுள்ளது. 

எதிர்வரும் காலங்களில், வட - கிழக்கு தமிழர்களின் உறவு எவ்வாறு பலப்படுத்தப்படப் போகின்றது. இந்த சூழலை எவ்வாறு பலமான சக்தியாக இணைத்துக் கொண்டு போக முடியும். அதற்காக நுட்பமான ஒரு வரலாற்றை எவ்வாறு உருவாக்க முடியும் என்கின்ற கேள்வி அனைவரின் எண்ணங்களிலும் இருக்கின்றது.

ஆகையால், இந்தக் காலகட்டம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில், மிகவும், சோர்ந்து போய் இருக்கின்ற அல்லது தங்களின் எதிர்காலம் பற்றிய எண்ணப்பாட்டை சரியாக வகுத்துக்கொள்ள முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. இது அபாயகரமான ஒரு சூழல். 

இந்த சூழலை புதிய வடிவில் அணுக வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். குறிப்பாக எங்களுடைய மே 18 வரை என்ற காலம் போய், ஏப்ரல் 21 என்ற காலம் வரை மையமாக வைத்து நாங்கள் எமது போராட்ட வடிவங்களையும் தமிழர்களுக்கான உரிமைக் குரலின் வடிவங்களையும் புதிய பாதையில் அமைக்க வேண்டிய ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பது வெளிப்படையான உண்மையாக மாறியிருக்கின்றது. அதுவரையில் நாங்கள் அனைவரும் கூட்டாக சிந்திக்க வேண்டி தேவை எழுந்துள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .