2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உறவுகளுக்கு அரசியல் கைதியின் கடிதம்

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லை எனில், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி, புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதியொருவர், கடந்த 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுவரும் நிலையில்,  அவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் என்ற 64 வயதுடைய அரசியல் கைதியொருவரே, இந்த உண்ணாவிரதப்  போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றார்.

இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக, அவரின் உறவுகள், குரலற்றவரின் குரல் அமைப்புக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

அவர் தனது உறவுகளுக்கு தெரியப்படுத்திய விபரத்தில், “மேல் நீதிமன்ற வழக்குகளின், முறையே 20 ஆண்டுகள், ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து, என்னால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் எனக்காக வாதாட அனுமதி பெற்றேன். 

“ஒரு வழக்கு, கடந்த 4 ஆண்டுகளாகவும் மற்றைய வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல், தவணையிடப்பட்டு வருகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அந்த இரண்டு வழக்குகளும் இப்போது முடங்கிவிட்டன. சிங்களம் தெரியாத சிறைக்கைதியாக நான் உள்ளதால், அதிக சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. அத்துடன் எனது அடிப்படை உரிமையும் மீறப்படுகின்றது.

“கடந்த பல மாதங்களாக, உடல் நோயால் அவாதிப்படுகிறேன். கழுத்துப்புண், வலது கை, கால் விறைப்பும் நடுக்கமும் இருக்கிறது. மேலதிக சிகிச்சை இன்றி சிறைக்குள்ளேயே உள்ளேன். மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லை எனில், நான் பிணை அனுமதி பெற, ஆவண செய்து தருமாறு கோரி, இம்மாதம் 6ஆம் திகதி முதல், (நீராகாரம் மட்டும் அருந்தி) உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.

“மேன்முறையீட்டு வழக்கில் என் சமர்ப்பணத்தை, 3 பக்கங்களில் தமிழில் கையளித்தேன். அதை இன்னும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை எனக் காரணம் காட்டியபடி, நீதிமன்றம் தவணையிடுகிறது. இதனால் சட்டமா அதிபர் தரப்பின் சமர்ப்பணம் இன்னும் கோரப்படவில்லை. விவாதத்துக்கும் திகதியிடப்படவில்லை.

“அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட மொழியுரிமை மற்றும் அடிப்படை உரிமையை, என் விடயத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அப்பட்டமாக மீறுகிறது. இது தொடர்பில், மன்றுக்கு பல கடிதங்களும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் எழுதியும் எந்தப் பயனும் இல்லை.

“கொரோனா பிரச்சினை, எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், சட்ட நடவடிக்கையின்றி சிறை இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவே வேறுவழியின்றி, பிணை அனுமதி கோரி, உண்ணாவிரதம் இருக்கிறேன். 

“நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவது அநீதி. சட்டத்தை அமுல்படுத்துமாறு, அரசாங்கத்திடம் கோருவது தவறா?.கொரோனா அபாயத்தின் மத்தியில் உண்ணாவிரதம் இருந்து நானாகவே என் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து வருகிறேன். எனக்கு எவரதும் அனுதாபமோ, வாக்குறுதியோ வேண்டாம். நீதி மட்டுமே வேண்டும்” என்று, தனது உறவுகளிடம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X