2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸாருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளார்.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்  செவ்வாய்க்கிழமை மாலை (19) புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றது. குறித்த வன்முறைச் சம்பவத்தையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஊடகவியலாளர்களும் செய்திகளைப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

இதன்போது யாழில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டார். சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அவரது பணியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு மன்றில் அழைக்கப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

அதனால் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். அதன்போது,

“வன்முறையை அடுத்து பெருமளவானோர் அங்கு கூடியிருந்தனர். தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அத்துடன் மோப்பநாயும் அங்கு கொண்டுவரப்பட்டது.

அதனால் அங்கு கூடியிருந்தவர்களை வெளியேற்றினேன். அப்போதுதான் ஊடகவியலாளர் எனத் தெரியாது முறைப்பாட்டாளரையும் வெளியேற்றினேன். எனினும் அவரை நான் தாக்கவில்லை” என்று பொலிஸ் அதிகாரியான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கினார்.

அதேவேளை நீதவான் சந்தேகநபரை எச்சரித்து, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவித்தார்.  அத்துடன், வழக்கை எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் சாட்சியையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்புமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X