2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குடத்னை தாக்குதலில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 02 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.குடத்தனை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அதிகாலை வேளை புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த 29ஆம் திகதி அதிகாலை புகுந்த தாக்குதலாளி உறக்கத்தில் இருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த கணவன் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்திருந்தனர்,

அதில் படுகாயமடைந்திருந்த ஜெயஸ்ரீ நிர்மலாதேவி (வயது 53) என்பவரே சிகிச்சை பயனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நிர்மலாதேவி, சம்பவ தினத்தன்று உயிரிழந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த எம்.சித்திரவடிவேல் (வயது 50) அவரது மனைவி சி.ஜெயந்தி (வயது 40) ஆகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை குறித்த தாக்குதலை அப்பகுதியை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும், குறித்த தாக்குதலாளி போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் ஏற்படுவதாகவும் அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த சந்தேக நபரான தர்சன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 30 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

அதனை அடுத்து பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் சம்பவ தினத்தன்று போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் மறுநாள் 31ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்தினார்கள். வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .