2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கையூட்டுப் பெற்ற கிராம சேவகர் இடைநீக்கம்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் பதவி இடைநீக்கம் செய்துள்ளார்.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் தனக்கு 25ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார்.

அதனால் குறித்த பெண் 15 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். இருந்த போதிலும் மிகுதி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விரைந்து தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

அந்நிலையில் குறித்த பெண், கிராம சேவையாளர் தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்துவது தொடர்பிலும் தான் ஏற்கனவே 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தொடர்பிலும் யாழ்.மாவட்ட செயலருக்கு முறையிட்டு உள்ளார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட செயலர் நிர்வாக நடைமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வரையில் குறித்த கிராம சேவகரை தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் மாவட்ட செயலரிடம் கேட்ட போது,

மக்கள் சேவைக்காக எந்தவொரு உத்தியோகஸ்தரும் பணம் கோர முடியாது. அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால், அது தொடர்பில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ என்னிடம் முறைப்பாடு செய்ய முடியும்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, முறைப்பாடு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தகுதி தராதரம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .